ADDED : ஜன 05, 2026 05:37 AM

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் ஜன.15ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதற்காக பார்வையாளர் மேடை, வாடிவாசல், பேரிகார்டு, குடிநீர், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு நேற்று பணிகள் துவங்கின. முதற்கட்டமாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் இடங்களில் மூங்கில் தடுப்பு வேலி அமைக்கும் பணி துவங்கியது. வாடிவாசலில் இருந்து கலெக் ஷன் பாயின்ட் வரை இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பாலமேடு: ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன.16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லுாரில் அரசு சார்பில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் விழா ஜன.7ல் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடக்க உள்ளது.
இதற்கு முன்னதாக பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல் பார்வையாளர் மாடங்களுக்கு வண்ணம் பூசும் பணி, பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. ஜல்லிக்கட்டு காளைகளை வாடி வாசலுக்கு அழைத்து வரும் பகுதிகள், போட்டி நடக்கும் மஞ்சமலை ஆற்றுப்பகுதிகளில் இயந்திரங்கள், துாய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதே போல் அலங்காநல்லுாரில் காளைகளை சேகரிக்கும் பகுதி, காளைகள் ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை இயந்திரம் மூலம் சுத்தம் செய்து மரத்தடுப்புகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏற்பாடுகளை விழா குழுவினர், மடத்து கமிட்டியினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

