/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கட்டாந்தரை' கண்மாய் கோடை துவக்கத்திலேயே தாண்டவமாடுகிறது வறட்சி : செல்லுார் 'காலி' கண்மாயை துார்வார எதிர்ப்பார்ப்பு
/
'கட்டாந்தரை' கண்மாய் கோடை துவக்கத்திலேயே தாண்டவமாடுகிறது வறட்சி : செல்லுார் 'காலி' கண்மாயை துார்வார எதிர்ப்பார்ப்பு
'கட்டாந்தரை' கண்மாய் கோடை துவக்கத்திலேயே தாண்டவமாடுகிறது வறட்சி : செல்லுார் 'காலி' கண்மாயை துார்வார எதிர்ப்பார்ப்பு
'கட்டாந்தரை' கண்மாய் கோடை துவக்கத்திலேயே தாண்டவமாடுகிறது வறட்சி : செல்லுார் 'காலி' கண்மாயை துார்வார எதிர்ப்பார்ப்பு
ADDED : மார் 16, 2026 05:21 AM

மதுரை: மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான செல்லுார் கண்மாய், கோடை துவக்கத்திலேயே ஒரு சொட்டு நீரின்றி கட்டாந்தரையாகக் காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
சாத்தையாறு அணையில் இருந்து வரும் தண்ணீர், குலமங்கலம், லட்சுமிபுரம், பூதக்குடி, பனங்காடி, ஆனையூர், கோசாகுளம், முடக்கத்தான் கண்மாய்கள் வழியாக கடைசியாக செல்லுார் கண்மாய்க்கு வருகிறது. ஒருகாலத்தில் 230 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடந்த இந்தக் கண்மாய், அருகிலுள்ள விவசாய நிலங்களை செழிப்புடன் வைத்திருந்தது.
நகர விரிவாக்கத்தால் விளை நிலங்கள் விலை நிலங்களானதாலும், ஆக்கிரமிப்புகளாலும் கண்மாய் பரப்பு சுருங்கியது. நாலாபுறமும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி கண்மாயின் நீர்வரத்து ஆதாரங்களும் சுருங்கின. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், கண்மாயின் ஆழம் குறைந்து, நீரைத் தேக்கும் திறனும் குறைந்தது.
நீர்மட்டம் குறைவு குடியிருப்பு, தொழிற்சாலைக் கழிவுகள் கண்மாயில் கலப்பதால், எஞ்சியுள்ள சிறிதளவு நீரும் பயன்பாட்டுக்குத் தகுதியற்றதாக மாறுகிறது. ரூ.70 கோடி செலவில் சீரமைக்கப்படும் பந்தல்குடி கால்வாய் பணிக்காக, பொதுபணித்துறையே கண்மாய் நீரை வெளியேற்றியதால் வறண்டு காணப்படுகிறது. மீனாம்பாள்புரம், நரிமேடு, பீ.பி.குளம், செல்லுார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
ஆழ்துளைக் கிணறுகள் செயலிழந்து வருவதால் கோடை காலத்தின் உச்சியில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடையும். உடனே துார்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என நீர்நிலை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர்:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பாசன வசதி மிகுந்து இருந்தபோது, 10 முதல் 15 அடியிலேயே நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. தற்போது வறண்டுள்ளதால் 600 அடி வரை அதலபாதாளத்திற்கு நீர்மட்டம் சென்று விட்டது.
கண்மாயை துார்வாரி, 5 மீட்டர் ஆழப்படுத்தினால் மழைக்காலத்தில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும். தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும் கண்மாய்க்கு, வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும் என்பதால் வண்டியூர் கண்மாய் போன்று சுற்றுலா தலமாக மாற்றி, படகு குழாம் அமைக்கலாம். இதனால் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். சுற்றி 3 கி.மீ., தொலைவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தவிர்க்கலாம்.
பந்தல்குடி கால்வாயில் அகற்றும் சாக்கடை கழிவுகளை, இரவோடு இரவாக டன் கணக்கில் கண்மாயில் கொட்டி மூடி வருகின்றனர். இதனால் கண்மாய் மேடாக மாறுவதால் குடியிருப்புகள் பெருக வாய்ப்புள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து கண்மாயை மீட்க சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். கண்மாயில் கட்டட, மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றார்.

