/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
/
மதுரை வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : பிப் 16, 2026 05:52 AM

மதுரை: தமிழக வனத்துறை சார்பில் மதுரை வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பிப். 14, 15ல் நடந்தன.
முதல் நாள், மாவட்ட வன அலுவலகத்தில், கணக்கெடுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, உபகரணங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான நேற்று, அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளம், சிறுமலை தெற்கு காப்புக்காடு, நாகமலை, சாத்தையார் அணை, பசுமலை குன்று, உசிலம்பட்டி, திருமங்கலம் உட்பட மதுரை கோட்டத்தில் 25 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வனத்துறை அதிகாரிகளுடன் பறவையியல் நிபுணர்கள் பத்ரிநாராயணன், பேட்ரிக், கவுதமா, சந்தியாஸ்ரீ உட்பட 60 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பாயின்ட் கவுன்ட், நேரடிப் பார்வை, பறவைகளின் ஒலி மூலம் இனங்களை கண்டறிந்து பதிவு செய்தனர்.
செம்போத்து, செம்பழுப்பு வால்காக்கை, ஆறுமணிக்குருவி, மாங்குயில், மாம்பழச் சிட்டு, குங்குமப்பூச்சிட்டு, நீலமுகப் பூங்குயில், செம்மார்புக் குக்குறுவான், குடுமிப் பருந்து, பச்சைக்கிளி, கள்ளிப்புறா, வெண்தொண்டை மீன்கொத்தி ஆகிய இனங்கள் கண்டறியப்பட்டன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேகரிக்கப்பட்ட தரவுகள் தொகுக்கப்பட்டு, அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்து மாநில அளவில் சரிபார்க்கப்படும். அதன்முடிவுகள், கோட்டத்தில் பறவைகள் வாழ்விட மேலாண்மை உத்திகளை வலுப்படுத்த, பல்லுயிர் பாதுகாப்புக்கு திட்டமிட உதவும்'' என்றனர்.

