/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கலெக்டர் அலுவலகம் முடக்கம் ஆறரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால்
/
மதுரை கலெக்டர் அலுவலகம் முடக்கம் ஆறரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால்
மதுரை கலெக்டர் அலுவலகம் முடக்கம் ஆறரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால்
மதுரை கலெக்டர் அலுவலகம் முடக்கம் ஆறரை மணி நேரம் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால்
ADDED : பிப் 01, 2024 07:30 AM

மதுரை : உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டதால் ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டர் அலுவலகம் பூட்டப்பட்டு, பணி முடங்கியது.
மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். மாவட்ட தலைவர் வீரமணி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மாரியப்பன் தலைமையில் வந்த அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் கேட்டை இழுத்து மூடினர். இதனால் கேட் முன்பாக ரோட்டில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
துணை கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். கேட்டின் முன் அமர்ந்ததால் பொதுமக்கள், அலுவலர்கள் யாரும் உள்ளே, வெளியே செல்ல முடியவில்லை. காலை 10:30 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணியை தாண்டி நீடித்தது. அதுவரை மற்றொரு கேட் வழியாக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அடையாள அட்டையை காட்டி உள்ளே வெளியே சென்றனர்.
போராடியவர்கள் கலெக்டரை பார்த்து மனு கொடுக்க வந்தனர். ஆனால் நேற்று 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட துவக்க நிகழ்ச்சி வாடிப்பட்டி தாலுகாவில் நடந்ததால் கலெக்டர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் பலரும் அங்கு சென்று விட்டனர். ஏற்கனவே சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் பலர் 2 நாள் விடுப்பு போராட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கேட் பூட்டப்பட்டதால் ஊழியர்களும் இல்லாத நிலையில், அலுவலக பணிகள் பாதித்தன.
மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ''கடந்த மே முதல் பலருக்கு உதவித் தொகை ரூ. ஆயிரம், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்கவில்லை. புதிய விண்ணப்பதாரர்களுக்கும் வழங்கவில்லை. அதேபோல வீட்டுமனை பட்டாவுக்கு மனு கொடுத்தும் கிடைக்கவில்லை. எனவே போராடுகிறோம்.
கலெக்டர் இல்லையென்றாலும் வருவாய்த்துறையினர் எழுத்துப்பூர்வமாக உறுதிதந்தால் கலைந்து செல்வோம்'' என்றனர். மாலை 5:00 மணிக்கு பின்னர் கலெக்டர் நேர்முக உதவியாளர் சந்திரசேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர், 'இதில் தீர்வு காண பிப்.10 -15க்குள் கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.