/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
/
புதூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 03, 2011 12:56 AM
புதூர் : புதூரில் பெண்கள் அதிகம் நடமாடும் ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் அருகில் புதிதாக டாஸ்மாக் ஒயின் ஷாப் திறக்கக் கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
புதூர் பஸ் ஸாண்ட் அருகில் 200 மீட்டர் இடைவெளியில் இரண்டு டாஸ்மாக் ஒயின்ஷாப்புகள் உள்ளன. இங்கு வரும் குடிமகன்கள் குடித்து விட்டு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் ஸ்டாண்டில் நிற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை அரசு திறக்க இருப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். புதூர் பஸ் ஸ்டாண்டிற்கு முன் ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம், அதன் அருகில் ஆண்கள், பெண்கள் ஐ.டி.ஐ., மற்றும் மின்வாரிய அலுவலகங்கள் உள்ளன. ஐ.டி.ஐ., வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பெண்கள் வருகின்றனர். இவர்கள் ஐ.டி.ஐ., ஸ்டாப்பில்தான் இறங்க வேண்டும்.
அப்பகுதியினர் கூறுகையில், 'புதிதாக துவங்க இருக்கும் ஒயின்ஷாப்பிற்கு எதிரிலேயே இரண்டு பக்கமும் செல்வதற்கான பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. இதை கருத்தில் கொள்ளாத அதிகாரிகள் குடியிருப்புகள் அதிகம் இல்லாத பகுதி என சான்று வழங்கி உள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டதற்கு, குடிமகன்கள் ஒயின்ஷாப்பிற்கு அரை கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் இங்கு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது என்கின்றனர். இங்கு ஒயின்ஷாப் வந்தால் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஐ.டி.ஐ.,க்கு வரும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இதனால் இப்பகுதியில் துவங்க இருக்கும் ஒயின்ஷாப்பின் பர்மிட்டிற்கு கலெக்டர் தடை விதிக்க வேண்டும், என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

