/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
"கல்யாணி' ராகத்தில் கவர்ந்த சஞ்சய்
/
"கல்யாணி' ராகத்தில் கவர்ந்த சஞ்சய்
ADDED : ஆக 03, 2011 12:57 AM
மதுரை : மதுரை பாண்டியன் ஓட்டலில் 'ராகப்பிரியா' மியூசிக் கிளப் இசை விழாவின் மூன்றாவது நாளான நேற்று பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் ரசிகர்களை இசை மழையால் மகிழ்வித்தார்.
கோல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, நாதசுர வித்வான் எஸ்.ஆர்.டி., வைத்தியநாதனிடம் இசை பயின்று, தன் குரல் வளத்தால் முன்னணி பாடகர் வரிசையில் இடம் பெற்றவர் சஞ்சய். ஆடிட்டர். பிலகரி ராக அடதாள வர்ணத்தோடு தொடங்கினார். 'நரசிஜனாப' என்ற முத்திரையோடு களைகட்டியது, கச்சேரி. தொடர்ந்து தியாகராஜ ஸ்வாமிகள் கீர்த்தனையில் ரசிகர்களை தன்வயப்படுத்திக் கொண்ட சஞ்சய், தர்பார் ராகத்தில் அடுத்த கீர்த்தனையை 'யோசனா மகல லோசனா' என்று துவங்கி, நடத்திய ராக தர்பார் பிரமாதம்.
ஆடிப்பூர நாளில் ஆண்டாள் பாடிய 'கீசு கீசென்று ஆனை சாத்தன் பேசுகின்ற பேச்சரவம் கேட்டிலையே' என்று மிஸ்ரசாபு தாளத்தில் கௌசீகப்பண்ணில் பாடிய போது, அரங்கில் பக்தி அலை பரவியது. 'கனகாங்கி' ராகத்தில் ஆலாபனை செய்த போது, இவர் 'சச்சின் சுப்பிரமணியமோ' என நினைக்க வைத்தார். 'உள்ளம் உருகி, உருகி அன்பின் வெள்ளம் ஆகாதோ பரமா' என்ற வரிகளில் இசை அருவியாக, வெள்ளமாக பெருகி, அனைவரின் மனதையும் நிறைத்தது. 'கனகாங்கி' ராகத்தில் ஸ்வர கோர்வைகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன. மெயின் ராகமாக கல்யாணி ராக ஆலாபனை நேர்த்தி. வயலின் இசைத்த வரதராஜனும் கல்யாணி ராகத்தை மெருகேற்றினார். முத்துசாமி தீட்சிதர் இயற்றிய கமலாம்பா நவா வர்ணத்தில் உள்ள 'கமலாம்பா பஜரே ரே மானஸ' என்ற கிருதியை சஞ்சய் பாடும் போது திருவாரூர் ஸ்தலத்தின் மகிமையை இசையால் உணர முடிந்தது.
மனோதர்ம சங்கீதத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை, சஞ்சயின் கற்பனா ஸ்வரங்களை கேட்கும் போது தெரிந்து கொள்ள முடிந்தது. வயலினில் வரதராஜனும், மிருதங்கத்தில் வெங்கடேசனும் கச்சேரியை அற்புதமாக செய்து சிறப்பித்தனர்.

