/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக அளவில் இதயநோய் சிகிச்சையில் மதுரை முதலிடம்
/
தமிழக அளவில் இதயநோய் சிகிச்சையில் மதுரை முதலிடம்
ADDED : செப் 30, 2025 04:18 AM
மதுரை: ''தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை இதயநோய் துறையில் அதிக நோயாளிகளை சிகிச்சை அளித்ததில் முதலிடத்தில் உள்ளோம்'' என டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் இருந்து அரசு மருத்துவமனை வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பின்னர் நடந்த கருத்தரங்கில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் பேசியதாவது: குறைந்த எண்ணிக்கையில் டாக்டர்களைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக தமிழக அரசின் விருது வழங்கப்பட்டது'' என்றார்.
இதயவியல் துறையின் இணைப் பேராசிரியர் சரவணன் பேசியதாவது: 3 அதிநவீன 'கேத்லாப்' கருவிகள் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் 4773 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 1868 நோயாளிகளுக்கு தேதி குறிப்பிட்டும் (எலக்டிவ்), 144 பேருக்கு மருத்துவமனை வந்த 2 மணி நேரத்திற்குள்ளும் 195 பேருக்கு 24 மணி நேரத்திற்குள் 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஓராண்டில் 1162 பேருக்கு 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 144 பேருக்கு நிரந்தரமாகவும் 404 பேருக்கு தற்காலிக 'பேஸ்மேக்கர்'கருவி பொருத்தப்பட்டுள்ளது. எங்களது இந்த சேவைக்காக தேசிய சுகாதார திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ் விருது வழங்கினார் என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், துணை முதல்வர் மல்லிகா, ஆர்.எம்.ஓ., சரவணன், மேட்ரன் சுலோச்சனா கலந்து கொண்டனர்.