ADDED : ஆக 23, 2026 06:43 PM

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் 48 நாள் மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது.
முருகனின் ஆறாம் படைவீடான சோலைமலையில் ஜூலை 5ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மறுநாள் மண்டல பூஜைகள் தொடங்கி தினமும் நடந்தன.
நேற்று 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு காலை சஷ்டி மண்டபத்தில் 1,008 சங்குகளுடன் தீர்த்தக் கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் தீபாராதனை காட்டப்பட்டு கலசங்கள் வெள்ளி மயில்வாகனத்தில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சன்னதி பிரகாரம் சுற்றி வந்து மூலவர் சன்னதியை அடைந்தன.
அங்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர், ஆதி வேல் சன்னதிகளில் கலசங்களின் புனித தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
