/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமரின் சூரியவீடு திட்டத்தில் விண்ணப்பிக்க பலரும் ஆர்வம்
/
பிரதமரின் சூரியவீடு திட்டத்தில் விண்ணப்பிக்க பலரும் ஆர்வம்
பிரதமரின் சூரியவீடு திட்டத்தில் விண்ணப்பிக்க பலரும் ஆர்வம்
பிரதமரின் சூரியவீடு திட்டத்தில் விண்ணப்பிக்க பலரும் ஆர்வம்
UPDATED : பிப் 28, 2024 08:16 AM
ADDED : பிப் 28, 2024 04:39 AM

மதுரை : மதுரை மாவட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடி சமீபத்தில் 'பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை' துவக்கி வைத்துள்ளார். 'சோலார் தகடுகள்' அமைக்க மதுரை மின்வாரியத்தினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மதுரை நகரில் 42 ஆயிரம், மாவட்டத்தில் 54 ஆயிரம் வீடுகளில் சோலார் மின்உற்பத்தி தகடுகளை நிறுவ வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நுாற்றுக் கணக்கானோர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஒரு கிலோவாட் உற்பத்திக்கான மின்தகடு அமைக்க ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், அதற்கு மேல் கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கபடும். ஒரு கிலோவாட் சூரிய தகடு, ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை உற்பத்தி செய்யும். இதனால் முதலீடு தொகையை குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.
400 யூனிட் பயன்படுத்தும் வீட்டுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.1125 வரை மின்கட்டணம் வரும். இவ்வீடுகளில் ஒரு கிலோ வாட் தகடு அமைத்து 240 யூனிட் உற்பத்தி செய்யலாம். மீதி 160 யூனிட்டுக்கு மின் கட்டணம் செலுத்தினால் போதும். இதற்கு ரூ.206 வரை செலவாகும். இதனால் (வழக்கமான தொகை ரூ.1125ல்) ரூ.919 மிச்சமாகிறது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் கூறுகையில், ''இத்திட்டத்தில் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சோலார் மின்தகடு அமைப்பது குறித்து வீடுவீடாக துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பலர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்'' என்றார்.
மதுரை மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் சந்திரா கூறுகையில், ''ஒரு கிலோ வாட் சோலார் தகடு அமைக்க 160 சதுர அடி போதுமானது. அதற்கு அரசு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீடுகளுக்கான மின்செலவை கணிசமாக குறைக்கலாம். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்'' என்றார்.

