ADDED : பிப் 22, 2026 05:36 AM
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடந்த உலகத்தாய்மொழி நாள் விழாவிற்கு முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். தமிழ்த் துறைத்தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார். மாணவர்கள் நந்தகுமரன், வர்ஷினி, கீதைப்பிரியன் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராக அருளானந்தர் கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முத்து சந்தானம் பங்கேற்று, 'தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் உணர்வு வேண்டும். குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட வேண்டும்' என்றார். பேராசிரியர் கற்பகம் ஏற்பாடு செய்திருந்தார்.
* இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலகத்தாய் மொழி நாள் விழா, தமிழ் மன்றம் நிறைவு விழா நடந்தது. தலைமையாசிரியர் கனகலட்சுமி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் இலசபதி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மீனாட்சி நகர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அல்லிமுத்து பங்கேற்று, 'தமிழின் பெருமைகள்' என்ற தலைப்பில் பேசினார். அமுதத் தமிழ்' என்ற தலைப்பில் சக்கிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஜான் பெல்சியாமேரி பேசினார். மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. ஆசிரியர் தேவி, உடற்கல்வி ஆசிரியர் முத்துராஜா பங்கேற்றனர். மாணவர் கோபிகண்ணன் நன்றி கூறினார்.
* மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் உலகத் தாய்மொழி நாள் விழா நடந்தது. மதுரை நான்காம் தமிழ்ச் சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். செயலாளர் தசரதராமன் முன்னிலை வகித்தார். அமெரிக்கன் கல்லுாரி தமிழ் உயிராய்வு மைய உதவிப் பேராசிரியர் ஹரிபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'உப்பும் கூலமும் கூழாங்கல்லும்' என்ற தலைப்பில் பேசினார். தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேராசிரியர் அதிவீரபாண்டியன் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பூங்கோதை நன்றி கூறினார்.

