ADDED : ஆக 17, 2026 11:42 PM
அழகர்கோவில், ஆக. 18 –
மதுரை சோலைமலை முருகன் கோயிலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் திருமுருகன் வார வழிபாடு சபை முருக பக்தர்கள் நேற்று மயில்காவடி எடுத்து வந்தனர்.
இலுப்பூரில் இருந்து புறப்பட்ட 108 முருக பக்தர்கள் மயில்காவடி ஏந்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலுார், கிடாரிபட்டி வழியாக சோலைமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். அவர்களை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் வரவேற்றார்.
கோயிலின் 4 பிரகாரங்களிலும் மேளதாளம் முழங்க காவடியுடன் ஆடிப்பாடி வந்த பக்தர்கள் மூலவர் சன்னதியில் தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு ஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், ஜவ்வாது, இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை இலுப்பூர் வழிபாடு சபை தலைவர் பொன்.முத்து விநாயகம், பொருளாளர் சேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
