ADDED : ஆக 18, 2026 03:39 AM

அழகர்கோவில்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருமுருகன் வார வழிபாடு சபையின் 108 முருக பக்தர்கள் மயில்காவடி ஏந்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலுார், கிடாரிபட்டி வழியாக மதுரை சோலைமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். அவர்களை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் வரவேற்றார்.
4 பிரகாரங்களிலும் மேளதாளம் முழங்க காவடியுடன் ஆடிப்பாடி வந்த பக்தர்கள் சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு ஆபரணங்கள் சாத்தப்பட்டு பூஜைகள் நடந்தன. சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், ஜவ்வாது, இளநீர், விபூதி, சந்தனம் 36 வகை அபிஷேகங்கள் நடைபெற்றுஅலங்காரம் செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை இலுப்பூர் வழிபாடு சபை தலைவர் பொன்.முத்து விநாயகம், பொருளாளர் சேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
