/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகர் தி.மு.க., பகுதி செயலாளர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; 'பசை' உள்ளோர் 'பாய்ச்சலுக்கு' தயார்
/
நகர் தி.மு.க., பகுதி செயலாளர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; 'பசை' உள்ளோர் 'பாய்ச்சலுக்கு' தயார்
நகர் தி.மு.க., பகுதி செயலாளர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; 'பசை' உள்ளோர் 'பாய்ச்சலுக்கு' தயார்
நகர் தி.மு.க., பகுதி செயலாளர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு; 'பசை' உள்ளோர் 'பாய்ச்சலுக்கு' தயார்
ADDED : மே 15, 2025 02:14 AM

மதுரை; மதுரை நகர் தி.மு.க.,வில் தற்போது உள்ள 15 பகுதி செயலாளர்கள் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்படவுள்ளது. புதிய பதவிகளை 'பலம்' படைத்தவர்களுக்கு தாரைவார்க்காமல் கட்சிக்கு உழைத்தவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
நகர் தி.மு.க., வில் மத்தி, வடக்கு, தெற்கு என மூன்று சட்டசபை தொகுதி அடங்கியுள்ளன. தற்போது 15 பகுதி செயலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு பகுதி செயலாளருக்கு கீழ் 4 வட்டச் செயலாளர்கள் உள்ளனர்.
தற்போது நிர்வாக காரணம் என்ற பெயரில் பல மாவட்டங்களில் பகுதி செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் 18 ஒன்றியங்கள் தற்போது 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட வடக்கு தி.மு.க.,விலும் இதற்கான பணிகள் நடக்கின்றன.
நகர் தி.மு.க.,வில் தளபதி கட்டுப்பாட்டில் 20 பகுதிச் செயலாளர்களாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி மத்தி, தெற்கு தொகுதிகளில் தலா 5 ஆக பகுதி செயலாளர் எண்ணிக்கை 7 ஆகவும், வடக்கு தொகுதியில் 5 ஆக உள்ளதை 6 ஆகவும் உயர்த்தி முடிவு செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலான பகுதியில் யாருக்கு செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் கூறியதாவது: கட்சிக்கு உழைத்த நிர்வாகிகள் பலர் இதுபோன்ற பதவிகளுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் பல வட்ட, பகுதி செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே உள்ள 15ல் 3 பகுதி செயலாளரை மாற்றும் முடிவும் உள்ளது.
இதனால் 8 புதிய பகுதி செயலாளர்கள் பதவி உருவாக வாய்ப்புள்ளது. இதற்காக 'பண பலம்' உள்ள மாநகராட்சி மண்டல தலைவர்கள் உட்பட பதவியை கைப்பற்ற காய் நகர்த்துகின்றனர். அனைத்து பதவிகளையும் புதியவர்களுக்கு வழங்காமல் கட்சிக்கு உழைத்த அனுபவம் உள்ள நிர்வாகிகளுக்கும் வழங்க வேண்டும் என்றனர்.