ADDED : டிச 15, 2024 07:09 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழையால் மலைகளில் இருந்து ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடைகளில் வருகிறது.
உசிலம்பட்டியின் மேற்கே நக்கலப்பட்டி ஊருக்குள் வரும் மழைநீர் அசுவமாதியிலும், மாதரை கண்மாய்க்கும் வந்து சேரும். மதுரை- - தேனி ரோடு விரிவாக்கம் காரணமாகவும், அடுத்தடுத்து வீடுகள் வடிகால் வசதியின்றி கட்டியுள்ளதாலும் மழைநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது.
அரசு கள்ளர்பள்ளி, கூட்டுறவு வங்கி, தெருக்கள் வயல்வெளிகள், மயானம் என மழைநீர் தேங்குகிறது. தாழ்வான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் செல்கிறது.
பாஸ்கரன்: எப்போது மழை பெய்தாலும் ஓடைகள் வழியாக மாதரை கண்மாய்க்கு சென்று விடும். 3 மாதங்களாக மழை பெய்ததால் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது. ஓடைகள் துார்ந்து போயும், ஆக்கிரமிப்பிலும் உள்ளன. என் மல்லிகை தோட்டத்திற்குள் 5 அடிக்கும் மேலாக தண்ணீர் தேங்கியுள்ளது. மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வருகிறேன். தண்ணீர் தேங்குவது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றார்.