ADDED : நவ 18, 2024 06:20 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 7வது தேசிய இயற்கை மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது.
நிறுவன முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். மூத்த இயற்கை வாழ்வியல் அறிஞர் தேவதாஸ் காந்தி முன்னிலை வகித்தார். யோகா மாணவர் மணிகண்டன் வரவேற்றார். சிவகாசி இயற்கை வாழ்வியல் அறிஞர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு இயற்கை வேளாண் அமைப்பின் உறுப்பினர் பெர்னாட், இயற்கை ஆர்வலர் சரோஜினி இயற்கை மருத்துவத்தின் நன்மைகள் குறித்து பேசினர். 'இயற்கையை நேசிப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்' எனும் தலைப்பில் மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது.
'விதையில்லா பழங்கள் உண்பதை தவிர்ப்போம்; அதிக நிறம் கொண்ட காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்ப்போம்; அடுப்பில்லா உணவை உட்கொள்வோம்; வாரம் ஒரு முறை உபவாசம் இருப்போம்' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். யோகா மாணவி கோமதி நன்றி கூறினார். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தார்.