ADDED : அக் 28, 2025 11:37 PM
மதுரை: நீட் போலி சான்று விவகாரத்தில் மாணவியின் தந்தைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் சொக்கநாதன் 55. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக பணிபுரிகிறார். மனைவி விஜய முருகேஸ்வரி. இவர்களது மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. இவர் 2025 ல் நடந்த நீட் தேர்வில் 228 மதிப்பெண் பெற்றார். முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் சீட் கிடைக்கவில்லை.
நீட் தேர்வில் 456 மதிப்பெண் பெற்றதாகக்கூறி சான்று சமர்ப்பித்ததில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரியில் காருண்யா ஸ்ரீவர்ஷினிக்கு சீட் கிடைத்தது. அச்சான்று போலியானது என பின் கண்டறியப்பட்டது. காருண்யா ஸ்ரீவர்ஷினி, சொக்கநாதன், விஜய முருகேஸ்வரியை திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சொக்கநாதன் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ், ''மனுதாரர் அப்பாவி; எவ்வித குற்றத்தையும் செய்யவில்லை,'' என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டு இல்லை. வழக்கின் சூழ்நிலை கருதி ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் ஒருவாரத்திற்கு தினமும் காலை 10:30 மணிக்கு போலீசில் ஆஜராக வேண்டும் என்றார்.

