ADDED : ஆக 19, 2026 06:02 PM
மதுரை: தென்னை மரங்களில் ஏற்படும் சத்து குறைபாட்டிற்கு ஒருங்கிணைந்த முறையில் உரமிட வேண்டுமென தோட்டக்கலைத்துறை கொட்டாம்பட்டி உதவி இயக்குநர் அருள்மணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தென்னை சாகுபடியில் பேரூட்ட, நுண்ணுாட்ட சத்துகள் குறைபாடு காணப்படுகிறது. தென்னை மரங்கள் ஊட்டசத்துக்களை அதிகளவு எடுத்துக்கொன்டு தென்னை மரத்தின் வளர்ச்சியும் உற்பத்தியும் ஒருமித்து நடப்பதால் எவ்வித தடையும் இன்றி ஊட்டச்சத்துக்கள் கிடைத்து உயர் விளைச்சல் பெறமுடியும். சத்துகள் பற்றாக்குறையால் மரத்தின் பெரும்பான்மையான இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனால் தென்னை மரங்களின் வளர்ச்சி தொய்வடைந்து மகசூல் இழப்பு ஏற்படும். எனவே காய்ப்பில் உள்ள மரங்களுக்கு ஜூன், ஜூலை, டிச., ஜனவரி மாதங்களில் ஒருங்கினைந்த முறையில் உரமிடுவது அவசியம்.
மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து நாலரை முதல் ஐந்தரை அடி தள்ளி வட்டபாத்தி அமைக்க வேண்டும். காய்ப்பில் உள்ள மரம் ஒன்றுக்கு 40 முதல் 50 கிலோ மட்கிய தொழு உரம், 560 கிராம் யூரியா, 320 கிராம் சூப்பர் பாஸ்பேட்,
1200 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ், 500 கிராம் தென்னை நுண்ணுாட்டம், 250 கிராம் மெக்னீசியம் சல்பேட், 50 கிராம் போரான் உரங்களை வட்டப்பாத்தியில் இட்டு போதுமான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆண்டுக்கு இருமுறை உரங்களுடன் தொழுஉரம் கலந்து இடுவது அவசியம் என்றார்.
