போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மறுக்கும் அதிகாரிகள்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மறுக்கும் அதிகாரிகள்
UPDATED : ஜூன் 30, 2026 10:15 PM
ADDED : ஜூன் 30, 2026 09:52 PM

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் தினமும் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
திருமங்கலத்தில் பத்து நாட்களுக்கு முன்பு திருமங்கலம் நகர் போக்குவரத்திற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் கீழ் 15க்கும் மேற்பட்ட போலீசார் தினமும் தேவர் சிலை அருகே மேம்பாலம் பகுதி, உசிலம்பட்டி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
திருமங்கலம் நகரில் உசிலம்பட்டி ரோடு, மதுரை ரோடு, முன்சீப் கோர்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மதுரை உள்பட வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ரோட்டோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். சாலை வியாபாரிகள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. பள்ளி கல்லுாரிகள் துவங்கும், முடியும் நேரத்தில் நகரே திணறிப் போகிறது.
நீண்ட காலமாக இப்பிரச்னை தொடர்கதையாகவே உள்ளது. ஆக்கிரமிப்புக்களை அகற்ற போலீஸ், நகராட்சி, நெடுஞ்சாலை, வருவாய்த் துறை அதிகாரிகள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நகராட்சி கமிஷனர் நகரின் நெரிசலை கண்டு கொள்வதே இல்லை. நெடுஞ்சாலை துறையினரோ தாங்கள் பணியில் இருப்பதையே மறந்து விட்டனர்.
இதனால் நெரிசலுக்கு தீர்வு காண வழியின்றி போலீசாரும், நடக்கக்கூட வழியின்றி பொதுமக்களும் தினமும் அவதிக்கு உள்ளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளின் கடமையை நினைவுபடுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உத்தரவிட வேண்டும்.
