/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டோல்கேட் கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு
/
டோல்கேட் கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : பிப் 13, 2024 06:33 AM
மதுரை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மண்ணை திருடி வாகனங்களில் கொண்டு சென்ற விவகாரத்தில் டோல்கேட் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருப்புவனம் புதுார் சின்னமாரி தாக்கல் செய்த பொதுநல மனு:
திருப்புவனம் அருகே பாப்பாகுடியில் ரயத்துவாரி சர்வே எண்கள் மற்றும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக வணிக நோக்கில் சவடு மண் அள்ளுகின்றனர். அரசிடம் அனுமதி பெறவில்லை. விவசாயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தாலுகா, மாவட்ட அளவிலான உயர்நிலைக்குழு அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
கனிமவளத்துறை செயலர், இயக்குனர், சிவகங்கை கலெக்டருக்கு புகார் அனுப்பினோம். மண் அள்ளி வாகனங்களில் கொண்டு சென்றதற்கு ஆதாரமாக திருப்பாச்சேத்தி (ராமேஸ்வரம்-மதுரை ரோடு) டோல்கேட்டில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். மண் அள்ள தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: ஜன.,23 முதல் பிப்.,12 வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணைய (என்.எச்.ஏ.ஐ.,) காரைக்குடி திட்ட இயக்குனர் பிப்.,19 ல் தாக்கல் செய்ய வேண்டும். கலெக்டர், கனிமவள துணை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.