ADDED : செப் 26, 2025 03:51 AM

நகை திருடியவர்கள் கைது
மேலுார்: அண்ணாகாலனி ஆசிரியர் மும்தாஜ். இவரது வீட்டில் நகை, வெள்ளிப் பொருட்கள் செப்.21 ல் திருடு போனது. இவ் வழக்கில் பக்கத்து வீட்டில் வசிக்கும் எலக்ட்ரீசியன் நீதிபாண்டி 43, நண்பர் கூலிமுத்து 32, ஆகியோரை டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ்குமார் கைது செய்தனர். கைதான இருவரும் மேலுாரில் பல இடங்களில் டூ வீலர் திருட்டிலும் ஈடுபட்டது தெரிந்தது.
மின்சாரம் தாக்கி பலி
அலங்காநல்லுார்: பாலமேடு அடுத்த ராஜாக்கள்பட்டி வடக்கு தெரு ராஜேஷ் 43, அலங்காநல்லுார் வாடிவாசல் அருகே பலசரக்கு கடை நடத்தி வந்தார். நேற்று கடையில் பழுதான குளிர்சாதன பெட்டி ஒயரை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி மயங்கினார். அலங்காநல்லுார் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
ஏ.டி.எம்.,மில் நுாதன மோசடி
திருமங்கலம்: இப்பகுதி அண்ணாநகர் பாண்டி 60. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். உசிலம்பட்டி ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்த ஒருவர், தான் ஓய்வுபெற்ற ராணுவவீரர் எனக்கூறி ஏ.டி.எம்., கார்டை பெற்று வேறு ஒரு கார்டை கொடுத்துவிட்டு தலைமறைவானார். சிறிது நேரத்தில் பாண்டியின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 23 ஆயிரம், அப்பகுதி நகைக்கடை சுவைப் மிஷின் மூலம் ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்தது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.