ADDED : நவ 20, 2025 06:01 AM

* பள்ளி மாணவி பலி
மதுரை: வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இரு நாட்களாக அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். சுகாதாரமற்ற குடிநீரா அல்லது வேறு காரணமா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலையில் இருவர் கைது
மதுரை: எம்.கே. புரத்தைச் சேர்ந்தவர் முத்துமணி போஸ் 28. நேற்றுமுன்தினம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் சரவணகுமார் 19. அருண்பாண்டி என்ற போஸ் 19, கைது செய்யப்பட்டனர். சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர். போலீசார் கூறுகையில், ''வழக்கு ஒன்றில் தேனி சிறையில் இருந்தபோது முத்துமணி போஸிற்கும், சரவணகுமாருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜாமினில் வெளிவந்த முத்துமணி போஸ், ராமநாதபுரம் சென்று வேலை செய்தார். நீதிமன்ற விசாரணைக்காக மதுரை வந்த அவரை நோட்டமிட்டு, சரவணகுமார் தலைமையில் 3 பேர் தலையில் கல்லைத்துாக்கி போட்டு கொலை செய்தனர்'' என்றனர்.
கடன் பிரச்னையால் தற்கொலை
மதுரை: அண்ணாநகர் சதாசிவ நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் 34. திருமணம் ஆகாதவர். சிமென்ட் கடை ஊழியர். பெற்றோர் இறந்த நிலையில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய கடன் குறித்து மனவேதனையில் இருந்தவர், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
24ஐ கர்ப்பமாக்கிய 64 கைது
வாடிப்பட்டி: அலங்காநல்லுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த 24 வயது பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் விமலா எஸ்.எஸ்.ஐ., கயல்விழி விசாரித்தனர். அப்பெண் ஆடு மேய்க்க சென்றபோது அவரை பலாத்காரம் செய்து வெளியே சொன்னால் தாயையும் சேர்த்து கொலை செய்துவிடுவதாக மிரட்டிய உடும்பன் என்ற ஆறுமுகத்தை 64, போலீசார் கைது செய்தனர்.
ஆம்புலன்ஸ் மோதி கொத்தனார் பலி
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுந்தரம் 59. திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு டூவீலரில் சென்ற போது, விரகனுார் டோல்கேட் அருகே பின்னால் வந்த தனியார் ஆம்புலன்ஸ் மோதியது. சம்பவ இடத்திலேயே சுந்தரம் பலியானார். விபத்தின் போது அதேவழியில் வந்த அரசு பஸ்சை கால்வாய்க்குள் இறக்கியதால் பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூவர் கைது
மேலுார்: பூஞ்சுத்தி ராஜேந்திரன். கீரனுார் பகுதியில் உள்ள பஞ்சமி நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபடவே போலீசார் விசாரித்தனர்.அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா 27, தான் இதற்கு காரணம் என்று ராஜேந்திரன் நினைத்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோதிபுரம் சசி தன்னுடைய இடத்தை சுத்தம் செய்ய முத்துராஜாவை அழைத்தார். அங்கு ராஜேந்திரன் உள்ளிட்ட 10 பேர் பட்டா கத்தியால் வெட்டினர்.இதில் காயமடைந்த முத்துராஜா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீரனுார் அஜீத் 23, மகாராஜன் 27, சின்னத்துரை 27, ஆகிய மூவரை மேலுார் போலீசார் கைது செய்தனர்.

