மடப்புரம் கோயிலில் நடந்தது என்ன பேராசிரியை நிகிதா விளக்கம்
மடப்புரம் கோயிலில் நடந்தது என்ன பேராசிரியை நிகிதா விளக்கம்
ADDED : ஜூலை 03, 2025 03:36 AM

மதுரை: சிவகங்கை மாவட்டம்திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார்விசாரணையின் போது அஜித்குமார் இறந்த நிலையில், முன்னதாக அங்கு தாயாருடன் சென்ற பேராசிரியை நிகிதா கூறியதாவது:
அந்த கோயிலுக்கு போனவுடன் அம்மாவைஇறக்க வீல் சேர் கேட்டேன். அப்போது சீருடை அணிந்த தம்பி (அஜித்குமார்) வந்தார். அம்மாவை ரேம்பில் ஏற்ற முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. அந்த தம்பியிடம் உதவி கேட்டேன். அவரும் உதவி செய்தார்.
விநாயகர் கோயில் அருகே அவரை நிறுத்தி, தேங்காய் பழம் வாங்கி வருவதாக கூறிவிட்டு நான் சென்றேன். அந்த தம்பி 'சாவியை கொடுங்கள். உங்கள் காரை நிறுத்திவிட்டு வருகிறேன்'என்றார்.
அப்போது என் ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துவிட்டு சென்றேன். அம்மா பையை எடுக்கவில்லை.
அம்மா ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதால் அவரின் நகைகளை காரிலேயே ஒரு பையில் வைக்க சொன்னேன். காரில் அம்மா இருந்தார். அந்த தம்பியிடம் கார் சாவியை கொடுக்க தயக்கமாக இருந்தது.
அவர் சீருடை அணிந்திருந்ததால் நம்பி கொடுத்தேன். அவரை காரை நிறுத்த சொல்லிவிட்டு தேங்காய், பழம் வாங்கச் சென்று அரை மணிநேரம் கழித்து வந்து, அம்மாவிடம் கேட்டேன். இப்போது தான் சாவியை கொடுத்தார் 'என்றார்.
மற்றொரு நிரந்தரகோயில் ஊழியர் வந்து என்னை மட்டும் கோயிலுக்கு அழைத்துச்சென்றார். திரும்ப வந்து போகலாமா என அம்மாவிடம் கேட்டேன். பின் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு செல்லலாம் என கூறினார்.
அப்போது அந்த ஊழியர், உச்சிகால பூஜை வந்துவிட்டால் வண்டியை தள்ள(வீல் சேரை) முடியாது என்றார். சரி என்று கிளம்பி, கார் சாவியை கேட்டேன். அவரும் அலுவலகம் சென்று வாங்கி வந்தார்.
சீருடை அணிந்த அந்த தம்பியை வரவழைத்து அவர் காரை எடுத்துவர கூறினார். அந்த தம்பி சாவியை வாங்கிட்டு போய் காரை எடுத்துவர நேரமாகியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.