செல்வப்பெருந்தகைக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க., கடும் எதிர்ப்பு
செல்வப்பெருந்தகைக்கு தொகுதி ஒதுக்க தி.மு.க., கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 03, 2025 03:37 AM

சென்னை: ஸ்ரீபெரும்புதுார் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடாது என, அத்தொகுதி தி.மு.க., நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 13 முதல், சட்டசபை தொகுதி வாரியாக, தி.மு.க., நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று, மயிலாப்பூர், தி.நகர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், இந்த சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதி நிர்வாகிகள், 'கடைசியாக, 2001ல் ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., போட்டியிட்டது. அதன்பின், கூட்டணிக்கு தான் ஒதுக்கப்படுகிறது.
'கருணாநிதி ஆட்சியில் ஸ்ரீபெரும்புதுார், பெரும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த தொகுதியாக மாறியது. ஸ்ரீபெரும்புதுார் என்பது ஒட்டுமொத்த தமிழக தொழில் வளர்ச்சியின் அடையாளம்.
'இந்தப் பகுதி வளர்ச்சியடைய தி.மு.க., ஆட்சியில் நிறைய விஷயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலையில், விரக்தியில் இருந்த தொகுதி மக்கள், கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தி.மு.க.,வே போட்டியிடும் என எதிர்பார்த்தனர்.
'ஆனால், காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை வேட்பாளர் ஆக்கப்பட்டார். அவருக்காக, தி.மு.க., களம் இறங்கி வேலை பார்த்தது. செல்வப்பெருந்தகை வெற்றி பெற்று விட்டார்.
'ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் தொகுதியில் இருக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிகளை எடுத்து செய்து, தங்களை வளப்படுத்திக் கொண்டனர்.
'அவரால், தி.மு.க.,வினருக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இருந்தபோதும், தொகுதியை தி.மு.க., தொகுதியாக மாற்றி வைத்திருக்கிறோம். வரும் தேர்தலில் தி.மு.க., இந்த தொகுதியில் போட்டியிட்டால், கட்சி நிச்சயம் வெற்றி பெறும்.
'இந்த சூழலில், அடுத்தடுத்தும் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. தி.மு.க., தான் போட்டியிட வேண்டும்.
'கட்சியினரின் விருப்பத்தை ஏற்று, தி.மு.க.,வைச் சேர்ந்தவரையே கட்சித் தலைமை வேட்பாளர் ஆக்கினால், அவரை கட்டாயம் வெற்றி பெற வைப்போம்.
'அதனால், வரும் சட்டசபை தேர்தலில், தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்காமல், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.