ADDED : நவ 21, 2025 04:07 AM
மதுரை: மதுரையில் கோட்ட அளவிலான ரயில்வே சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், மதுரை பகுதி மக்கள் இயக்கம் சார்பில் நடந்தது.
இயக்கத் தலைவர் ஆழ்வார் ராஜா தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் வைகை ராஜன் முன்னிலை வகித்தார்.
பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள், ரயில்வே கோட்ட முதன்மை வர்த்தக இன்ஸ்பெக்டர் இளநி மணிகண்டன், ஓய்வு பெற்ற பேராசிரியர் முருகன் ஆகியோர், சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
சிலம்பு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரையில் இருந்து கோவை, சேலம், காரைக்குடி, வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்க வேண்டும். மதுரை - காரைக்குடிக்கு மேலுார், திருப்பத்துார் வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
கதலி நரசிங்கப் பெருமாள் கூறுகையில் ''மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் வரும். பெறப்பட்டுள்ள சங்க கோரிக்கைகள் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும்'' என்றார்.
செங்கோட்டை, தேனி, ராமேஸ்வரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரயில் பயணிகள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

