ADDED : பிப் 03, 2025 05:38 AM
மதுரை: 'திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உரிமை குறித்து தவறான தகவல்களை பரப்பப்படுவதாக' மதுரை மதநல்லிணக்க அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் கூறினார்.
அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் பலநுாறு ஆண்டுகளாக முருகன், காசி விஸ்வநாதர், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் ஆகியவை மதநல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக உள்ளன. ஆனால் அங்கு பலநுாறாண்டு நடைமுறையை மாற்றும் விதமாக சில அமைப்புகள் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.
அதை தடுத்து நிறுத்த வேண்டிய வருவாய், போலீஸ் துறைகள் அவர்களுக்கு துணைபோவது கண்டனத்திற்குரியது. மலைமீதுள்ள தர்கா, பள்ளிவாசல், மலைஉச்சி வரை செல்லும் படிக்கட்டுகள், நெல்லித்தோப்பு, அதை ஒட்டிய மண்டபம், தர்காவோடு இணைந்த கொடிமரம் போன்றவற்றின் உரிமை குறித்து நுாறு ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு இடங்களுக்கு தர்கா நிர்வாகம் உரிமை கோரவில்லை.
ஆனால் தேர்தல் அரசியலில் ஓட்டுக்களை பெறுவதற்காக சில அமைப்புகள் தவறான செய்திகளை பரப்புகின்றன. அதேபோல மலையின் பெயரையும் அவரவர் விருப்பப்படியே கூறி அழைக்கின்றனர். அதிலும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
