ADDED : பிப் 04, 2025 05:24 AM
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் வாகனங்களின் பின்னால் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் பின் தொடரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதற்காக டிராக்டர்கள், மினி லாரிகள், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. விவசாய பயன்பாடு, வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல பயன்படுத்தும் வாகனங்களின் பின்பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இருப்பதில்லை.
இதனால் பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவு நேரங்களில் பின்தொடரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு வெளிச்சம் குறைவாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத முன் செல்லும் வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து அதிகாரிகள் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.