/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இலாகா வசூல்' என்ற பெயரில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மாதம் ரூ. பல லட்சங்களை சுரண்டல்
/
'இலாகா வசூல்' என்ற பெயரில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மாதம் ரூ. பல லட்சங்களை சுரண்டல்
'இலாகா வசூல்' என்ற பெயரில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மாதம் ரூ. பல லட்சங்களை சுரண்டல்
'இலாகா வசூல்' என்ற பெயரில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மாதம் ரூ. பல லட்சங்களை சுரண்டல்
ADDED : ஏப் 14, 2025 05:31 AM

மாநகராட்சியில் மார்க்கெட்டுகள், இருசக்கர வாகன காப்பகங்கள், கழிவறைகள், குளியலறை, கடைகள் என நுாற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு அதன்மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.
இதில் ஏலம் போகாத இனங்களை வீணடிக்காமல், அவற்றை மாநகராட்சியே நடத்தி, கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதை 'இலாகா வசூல்' முறை (டிபார்ட்மென்ட் கலெக் ஷன்) என்பர்.
இவ்வகையில் மாநகராட்சியில் மாட்டுத்தாவணி பகுதி இருசக்கர வாகன காப்பகம், மீன் மார்க்கெட் வாகன கட்டணம் வசூல், நகரில் முக்கிய இடங்களில் உள்ள கழிப்பறைகள் என 50க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இங்கெல்லாம் அலுவலர்களே கட்டணத்தை வசூல் செய்து மறுநாள் காலை மாநகராட்சியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வகையில் மாதம் ரூ. பல லட்சம் வருவாய் கிடைக்கும்.
ஆனால் இலாகா வசூலில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: 'இலாகா வசூல்' என்ற பெயரில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மாதம் ரூ. பல லட்சங்களை சுரண்டி வருகின்றனர். ஆளும்கட்சி பிரமுகர் - கவுன்சிலர் - மாநகராட்சி அலுவலர்கள் என கூட்டு சேர்ந்து வசூலில் ஈடுபடுகின்றனர். வார்டில் வசூலாவதில் சொற்ப தொகையை மாநகராட்சிக்கு ஒப்படைக்கின்றனர். மீன் மார்க்கெட்டில் ஒரு பெண்ணிடம் வாகன கட்டணம் அதிகம் வசூலித்தது தொடர்பான வீடியோ வைரலானது.
அதாவது மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து அதை பங்கிட்டு கொள்கின்றனர். இதற்காக ரசீதும் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் தேதி, நேரம் எதுவும் இருக்காது.
இதன் மூலம் மாதம் கோடிக்கணக்கில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கமிஷனராக மதுபாலன் இருந்தபோது இலாகா வசூல் முறைகேடு மீது நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் அவர் மாற்றம் செய்யப்பட்டார். இலாகா வசூல் செய்யப்படும் இனங்களை முறையாக ஏலம் விடுவதற்கு மேயர், கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கமிஷனர் சித்ரா கூறியதாவது:
இதுதொடர்பான புகார் என் கவனத்திற்கும் வந்தது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நான் சோதனையிட்ட போது கூட ஒரு வாகன காப்பகத்தில் இருந்து வெளியேறிய வாகனத்திற்கு உரிய ரசீது இல்லை என தெரிந்தது.
இதனால் சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளோம். 'மாநகராட்சி வாகன காப்பகங்களில் ரசீது தரவில்லை என்றால் வாகனங்களை இலவசமாக நிறுத்திச்செல்லலாம்' என்ற அறிவிப்பு பலகை வைக்கும் முடிவில் உள்ளோம்.
விரைவில் இதுபோன்ற முறைகேடுகளை தடுத்து, மாநகராட்சி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

