/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல் 3 மாதங்களாகியும் விடிவு இல்லை
/
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல் 3 மாதங்களாகியும் விடிவு இல்லை
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல் 3 மாதங்களாகியும் விடிவு இல்லை
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள சிக்கல் 3 மாதங்களாகியும் விடிவு இல்லை
ADDED : டிச 04, 2025 07:07 AM
மதுரை:தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., பிரச்னையால் 3 மாதங்களாகியும் சம்பளம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
தமிழக சட்டசபை அறிவிப்பின்படி சென்னை, விழுப்புரம், மதுரை, திருப்பூர், திருச்சி, ராமநாதபுரம் உட்பட 20 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளுக்கு பாடம்வாரியாக 200 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பான உத்தரவு ஆக.,15ல் வெளியானது.
இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தனி 'அக்கவுண்ட் ஹெட்' எண் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை பள்ளிகள் மூலம் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் இவ்விபரங்களை பதிவேற்றம் செய்யமுடியவில்லை. இதனால் இப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
கட்டட வசதியும் இல்லை
இதுபோல் நவ., முதல் வாரத்தில் 13 தொடக்கப்பள்ளிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. 4 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமையாசிரியர், 5 பட்டதாரி ஆசிரியர்கள் (பாடம் வாரியாக) பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது வரை இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், மாற்றுப்பணியில் பாடம் நடத்துகின்றனர். இதுபோல் புதிய தொடக்க பள்ளிகளுக்கு கட்டட வசதி இன்றி சில பள்ளிகள் திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 2021 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை பிடிக்க ஆசிரியர், அரசு ஊழியர் பக்கபலமாக இருந்தனர். அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் 70 சதவீதம் வரை நிறைவேற்றப்படவில்லை.
கல்வித்துறையில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கான கட்டமைப்புகளை உடன் மேற்கொள்ள அரசு தவறுகிறது. ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்னையையும், மாணவர்கள் பாதிக்காத வகையில் புதிய தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடன் உருவாக்கி, நிரந்த ஆசிரியர்களையும் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

