ADDED : நவ 03, 2025 04:33 AM

அலங்காநல்லுார்:  சத்திரப்பட்டி அருகே சின்னப்பட்டியில் சமீபத்திய  மழையால் அறுவடை பணிகள் தாமதமாகி மகசூல் பாதித்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பெரியாறு கால்வாய் பாசன 6வது கால்வாய் மூலம் இருநுாறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாகுபடி செய்யப்பட்ட முதல் போக நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கதிர்கள் மழைக்கு சாய்ந்து வயல் நீரில் மூழ்கி அழுகியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சின்னப்பட்டி கஜேந்திரன் கூறுகையில், '' 115 நாளில் விளையும் ஏ.எஸ்.டி.,16 ரக நெல் பயிரிட்டு இருந்தேன். மழையால் அறுவடை தள்ளிப்போனது. ஏக்கருக்கு 40க்கு பதில் 30க்கும் குறைவான மூடைகளே கிடைத்தது. மழையில் நனைந்து விலை போகாத வைக்கோலை காய்ந்த பின் எரித்து விட்டோம். இப்பகுதியில் பல ஏக்கர் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்றார்.

