/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதமாக நடக்காத சிண்டிகேட்; முடங்கும் ஆராய்ச்சி பிரிவு; தேங்கும் கோப்புகள்
/
மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதமாக நடக்காத சிண்டிகேட்; முடங்கும் ஆராய்ச்சி பிரிவு; தேங்கும் கோப்புகள்
மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதமாக நடக்காத சிண்டிகேட்; முடங்கும் ஆராய்ச்சி பிரிவு; தேங்கும் கோப்புகள்
மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதமாக நடக்காத சிண்டிகேட்; முடங்கும் ஆராய்ச்சி பிரிவு; தேங்கும் கோப்புகள்
ADDED : பிப் 04, 2026 07:12 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில், மூன்று மாதங்களாக சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் நடக்காததால், ஆராய்ச்சி பிரிவு முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் இன்றி, பல்வேறு கோப்புகள் தேங்கி கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காலி பணியிடங்கள் இப்பல்கலையில், 2024 மே முதல், துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பல்கலையை வழிநடத்தும் கன்வீனரான, கல்லுாரிக்கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி, சென்னையில் உள்ளார். 2020 முதல் பதிவாளர் உள்ளிட்ட, உயர் நிர்வாக பதவிகள் அனைத்தும் காலியாக உள்ளன.
மாதந்தோறும் சிண்டிகேட் கூட்டம் நடக்க வேண்டும். அப்போது தான் நிர்வாகம், ஆராய்ச்சி பிரிவு, கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளுக்கும், பல்கலை இணைவிப்பு கல்லுாரிகளில் புதிய பாட திட்டங்களுக்கான ஒப்புதல், தேர்வு சார்ந்த முடிவுகளுக்கும் தாமதமின்றி அனுமதி பெற முடியும்.
ஆனால், இப்பல்கலையில், 2025 நவம்பரில் கடைசியாக சிண்டிகேட் கூட்டம் நடந்தது. அதற்கு பின் நடக்கவில்லை. ஏற்கனவே துணைவேந்தர் இல்லாததால், ஆராய்ச்சிகள் தொடர்பாக, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பேராசிரியர்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இணைவிப்பு கல்லுாரிகளில் புதிய பாடத் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்காதது போன்ற பிரச்னைகள் எழுந்துள்ளன.
பேராசிரியர்கள் பாதிப்பு பேராசிரியர்கள் கூறியதாவது:
மத்திய, தனியார் பல்கலைகளில், 2026 - 2027ம் ஆண்டுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது. ஆனால், இங்கு அதற்கான நடவடிக்கையே இல்லை. உயர் பதவிகளில், 'கூடுதல் பொறுப்பு' என்பது பல்கலை விதிப்படி, 6 மாதங்கள் தான் பதவியில் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போதுள்ள பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறார். இதுபோல, தொலைநிலைக் கல்வி இயக்குநர் முத்துப்பாண்டி உள்ளிட்டோரும், 2 ஆண்டுகளுக்கு மேல், கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.
சிண்டிகேட் கூட்டம் நடந்தால், பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அவர்களின் பதவி உயர்வால் தற்போது, 'பொறுப்பு' பேராசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
ஒரு மாதத்தில், தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வரும். அப்படி வந்தால், அடுத்த மே வரை, பதவியில் தொடர வாய்ப்பு கிடைக்கும் என்ற உள்நோக்கத்தில், சிண்டிகேட் நடக்கவிடாமல் அவர்கள் உள்குத்து வேலைகளில் ஈடுபடுகின்றனர் என கூறப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

