ADDED : ஜூலை 25, 2025 03:32 AM
மதுரை: திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். தனி அலுவலர் அவ்வை அருள் முன்னிலை வகித்தார். இயக்குநர் பர்வீன் சுல்தானா பேசுகையில்,''மதுரை என்பது இடமல்ல, அது தமிழை, ஒழுக்கத்தை முன்னெடுத்த நிலம். தமிழைத் தமிழில் வாசிக்க வேண்டும். தமிழ் என்பது மாபெரும் பெருங்கடல்'' என்றார்.
இளங்கோவடிகளின் இதயம் என்ற தலைப்பில் பாலாஜி பேசியதாவது: சிலப்பதிகாரத்தில் கோவலன் குறையும் நிறையும் உள்ளவனாக படைக்கப்பட்டான். காப்பியம் முழுவதும் எதிர்மறை விஷயங்களைப் பேசவில்லை. கண்ணகி தெய்வமாகப் போகிறாள் என்பதையும் முன்பே இளங்கோவடிகள் அறிவுறுத்துகிறார். கண்ணகியின் இல்வாழ்க்கை இருட்டடிப்புச் செய்யப்படுகிறது, என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.