ADDED : பிப் 11, 2024 12:56 AM
திருப்பூர்: ''தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில்பல கோயில்களின் பாதுகாப்பு நிலைமை படுமோசமாக இருக்கிறது'' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
இரு நாட்களுக்கு முன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தும் அதெல்லாம் வேலை செய்யவில்லை. போலீஸ் விசாரித்த பின் தான் இது தெரிய வந்தது.
தொன்மை வாய்ந்த இக்கோயிலில் காவலாளி கூட நியமிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதே கோயிலில் ஒரு வாரம் முன் இரு வாலிபர்கள் ஆபாச பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர்.
அதுவும் கோயிலுக்குள்இருக்கும் அறநிலையத்துறை அலுவலகம் முன்பே நடந்தது. பக்தர்களின் எதிர்ப்பு வந்த பின் நிர்வாகம் மன்னிப்பு கேட்டது; புகாரும் அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இதே கோயிலில் இஸ்லாமியர் உள்ளே சென்று அலைபேசியில் வீடியோ எடுத்ததும் சர்ச்சையாகியது.
கோயிலைக் காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பக்தர்களோடு கோயில் மண்டபத்தில் அமர்ந்து பேசக்கூடாது என்று கோவில் நிர்வாகம் தடை செய்துஉள்ளது.
தமிழகத்தில் உள்ளபல கோயில்களில் தேவையில்லாத உத்தரவுகளை பிறப்பித்து பாரம்பரியமான விஷயங்களை தடை செய்கிறது; பக்தர்களை வேதனைப்படுத்தும் செயலில் இந்த அரசு செயல்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடவுள் நம்பிக்கை இல்லாத தி.மு.க. ஆட்சியால் கோயில்கள் சீரழிக்கப்படுகின்றன; பக்தர்கள் பயமுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.