/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது; நடிகர் சூரி
/
அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது; நடிகர் சூரி
அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது; நடிகர் சூரி
அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது; நடிகர் சூரி
ADDED : டிச 29, 2025 06:59 AM

மதுரை: ''அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது,'' என, மதுரையில் 'இணைப்பு' அமைப்பின் இளைஞர் தொழில்முனைவோர் வழிகாட்டும் நிகழ்ச்சியில் நடிகர் சூரி பேசினார்.
வேலை தேடும் இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடன், 'தி கனெக்ட்' அமைப்பின் சார்பில், மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியில் மதுரை வளர்ச்சி குறித்த பாடல் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலம்மாள் கல்விக் குழுமம் தலைவர் முத்துராமலிங்கம் பேசியதாவது:
பட்டம் பெற்றவர்கள் கல்வியறிவை பயன்படுத்தி, தொழில் துவங்கி பலருக்கு வேலை தரவேண்டும் எனும் நோக்கத்தில் 'இணைப்பு' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து அதிக விமானங்கள் வந்தால் தான் மதுரை வளர்ச்சி அடையும்.
டில்லியே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மாணவர்கள், பிற அமைப்புகளை திரட்டி, மாரத்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டராக வேண்டியவன் நடிகர் சூரி பேசிய தாவது:
நீங்கள் சம்பாதித்து உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அனுபவிக்க உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். என் பெயர் ராம். தம்பி பெயர் லட்சுமணன். நான் கலெக்டராக இங்கு நிற்க வேண்டிய ஆள்.
லட்சுமணன் பொறியாளராக நிற்க வேண்டியவர். இருவரும் மதுரை ஷெனாய் நகர் பள்ளியில் படித்தோம். 8ம் வகுப்பு தேர்ச்சியோடு பள்ளி படிப்பு முடிந்தது.
'பெரிய முதலாளியாக வ ர வேண்டும்' எனக்கூறி, டீக்கடையில் அப்பா வேலைக்கு சேர்த்து விட்டார். பின்னர் சினிமா ஆசையில் சென்னை சென்றேன். 8 ஆண்டுகளாக பெயின்டர் உட்பட கிடைத்த வேலையை செய்தேன். சென்னையில் பெரிய கட்டடங்களில், என் கைப்படாத இடமே இல்லை.
சினிமா வாய்ப்பிற்காக போட்டோ எடுக்க, 20 ரூபாய் கூட இருக்காது. சாப்பிட்டால் போட்டோ பிரின்ட் போட முடியாது என்பதால் ஒரு டீ, பன் என டீக்கடையில் அக்கவுன்ட் வச்சு தான் வாழ்க்கை ஓடியது.
ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்தது. எனக்கு டிரஸ் அளவு எடுத்த போது கை, காலெல்லாம் நடுங்கி, கண் கலங்கியது. 'ஷாட்' எடுத்த பின், இன்னொருவரை அந்த கேரக்டருக்கு பரிந்துரைத்தனர். உடனே சட்டையை கழட்டுங்கள் என்றனர்.
எல்லாருக்கும் நடப்பது எனக்கும் நடந்தது. அதன் பிறகு போராட்டம் தான்.
ஒரு பட வாய்ப்பிற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்தேன். 2008ல், வெண்ணிலா கபடி குழு பட வாய்ப்பு கிடைத்தது.
அஜித்தின் ஜி படத்தில் சிறு வேடத்தில் நடித்தேன். ஒருமுறை சண்டைக் காட்சியில் என் மண்டை உடைந்தது. அஜித், 'பார்த்து பண்றது இல்லையா, எந்த ஊரு?' என்றார். மதுரை என்றேன். அவர்,'மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு தீயாக துருதுருவென இருக்காங்க... ஒண்ணு சொன்னா நாலா பண்றான்' என்றார். இது எனக்கு நம்பிக்கை கொடுத்தது.
விலையே கிடையாது வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் வாழ்க்கை மாறியது. ஒரு கட்டடம் விலைக்கு வந்தது. அதிக பணம் கொடுத்து வாங்கறேன் என என் மனைவி சண்டை போட்டார். நான், 'எவ்வளவு சொல்லியிருந்தாலும் வாங்கியிருப்பேன். நான் மயக்கம் போட்டு விழுந்த அலுவலகம் இருந்த கட்டடம் இது தான். சிலவற்றிற்கு விலையே கிடையாது' என்றேன்.
பல வலிகளை தாண்டியதால், சூரியை இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. வாழ்க்கையில நிறைய அவமானங்கள் வரும். அதற்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்.
தோல்வி வரும். அடிபட்டு ஜெயிச்சவனிடம் இருக்கும் தெளிவு, ஆசைப்பட்டு ஜெயிச்சவனிடம் இருக்காது. விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை, கடவுள் நிச்சயமாக துாக்கி விடாமல் இருக்க மாட்டார். மொபைல் போனை பார்த்து உறவுகளை விட்டு விடாதீர்கள். நான் இங்கு நிற்க முழு காரணம் குடும்பம் தான். குடும்பத்தை விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜி.ஆர்.டி., ஜுவல்லரி நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன், தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குநர் ரமேஷ், பொன் பியூர் கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி, அம்மா மெஸ் நிறுவனர் செந்தில்வேல் ஆகியோர் மாணவர்களுக்குஆலோசனை வழங்கினர்.

