/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்து கழகத்தில் நடக்குது 'ஆள்' மாறாட்டம்
/
போக்குவரத்து கழகத்தில் நடக்குது 'ஆள்' மாறாட்டம்
ADDED : ஜூன் 03, 2025 01:01 AM
மதுரை: மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரே ஆள் தினக்கூலி ஊழியராக வெவ்வேறு பெயரில் தொடர்ந்து பணியாற்றுவதால் தொழிற்சங்கத்தினர், அலுவலர்கள் வளம்கொழிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் உள்ளன. இங்கு 45க்கும் மேற்பட்ட டெப்போக்கள் உள்ளன. டிரைவர், கண்டக்டர், கிளார்க் பணியிடங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது.
பொதுவாக தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் அனுபவம் வாய்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் அலுவலக பணிக்கு சென்று விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு பதில் தினக்கூலிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காக 280 பேருக்கு மேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன் தினக்கூலி பணியில் நியமிக்கப்பட்ட சிவகாசி டெப்போவைச் சேர்ந்த 5 பேர் இரு ஆண்டுகளாக பணியாற்றி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணிநிரந்தரம் பெற்றுள்ளனர்.
இவ்வழக்கில் துணை மேலாளர் ஒருவரே அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. இதை கருத்திற்கொண்டு தினக்கூலி பணியாளர்களை 40 நாட்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கின்றனர்.
இதன்படி தினக்கூலி ஒருவர் 40 நாளில் பணியை முடித்துவிடுவார். அதன்பின் வேறு ஒருவரை நியமிப்பர். ஆனால் முதல் நபரே தொடர்ந்து 'வேறு பெயரில்' பணியாற்றுவார்.
இப்படி பல டூட்டிகளை பார்த்தால் பின்னாளில் நிரந்தர பணிவாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த ஆள்மாறாட்டம் நடப்பதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். இவ்வகை ஆட்கள் நியமனத்தில் சில அலுவலர்களும், சில தொழிற்சங்க நிர்வாகிகளும் வளங்கொழிப்பதாக சக ஊழியர்கள் புலம்புகின்றனர்.