/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலமடை சந்திப்பில் போக்குவரத்து மாற்றி அமைத்து கண்காணிப்பு; நாளை மறுநாள் முதல் மாற்ற வாய்ப்பு
/
மேலமடை சந்திப்பில் போக்குவரத்து மாற்றி அமைத்து கண்காணிப்பு; நாளை மறுநாள் முதல் மாற்ற வாய்ப்பு
மேலமடை சந்திப்பில் போக்குவரத்து மாற்றி அமைத்து கண்காணிப்பு; நாளை மறுநாள் முதல் மாற்ற வாய்ப்பு
மேலமடை சந்திப்பில் போக்குவரத்து மாற்றி அமைத்து கண்காணிப்பு; நாளை மறுநாள் முதல் மாற்ற வாய்ப்பு
ADDED : நவ 25, 2024 04:59 AM

மதுரை : மதுரை மேலமடை சந்திப்பு மேம்பால பணிகளால் சிவகங்கை ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்களை அனுப்பி 'முன்னோட்டம்' பார்க்கப்பட்டது.
மதுரை மேலமடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.150 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் அண்ணா பஸ்ஸ்டாண்ட் முதல் சிவகங்கை ரோட்டில் கோமதிபுரம் 4வது தெரு வரை 2100 மீ.,க்கு ரோடு விரிவாக்கமும் நடந்து வருகிறது.
இன்னும் ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் விரைவாக நடக்கிறது. இதில் சிவகங்கை ரோட்டில் பாலத்தின் துாண்களுக்கு இடையே மேல்தளம் அமைக்கும் பணிக்காக கீழே இரும்பு கம்பிகளால் முட்டுக்கொடுக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக போக்குவரத்தை சில மாதங்களுக்கு மாற்றி அமைக்க உள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸ் அனுமதிக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து நேற்று சிவகங்கை ரோட்டில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுமதித்தனர்.
ஆவினில் இருந்து வரும் வாகனங்கள் மேலமடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காய்கறி மார்க்கெட், அல்லது வலது புறம் அண்ணாநகர் சென்று ரிங்ரோடு செல்ல வேண்டும்.
சிவகங்கை ரோட்டில் இருந்து வருவோர் கோமதிபுரம் 6 வது தெரு வழியாக அண்ணாநகர் சென்று மதுரைக்குள் செல்ல அனுமதித்தனர். மதியம் 2:00 மணி வரை அதிகாரிகள் கண்காணித்தனர். பின்னர் வழக்கமான போக்குவரத்து நடந்தது.
இதில் போலீஸ் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர் இளமாறன், இன்ஸ்பெக்டர் சோபனா, நெடுஞ்சாலைத் துறையின் கண்காணிப்பு பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவிப் பொறியாளர் குருபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், ''இதுதொடர்பாக அப்பகுதி மக்களுடன், போக்குவரத்து கழக நிர்வாகம், போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, புதிதாக பஸ்ஸ்டாப்பை எங்கு வைக்க வேண்டும், நெரிசல் எங்கு ஏற்படும் என்பதை ஆலோசித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். நவ.27 முதல் இது அமலுக்கு வரவாய்ப்புள்ளது. ஆறுமாத காலம் இது அமலில் இருக்கும்'' என்றனர்.