/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய டி.ஜி.பி., தேர்வில் முறைகேடு நடந்தால் தலையிடுவோம்: ஐகோர்ட்
/
புதிய டி.ஜி.பி., தேர்வில் முறைகேடு நடந்தால் தலையிடுவோம்: ஐகோர்ட்
புதிய டி.ஜி.பி., தேர்வில் முறைகேடு நடந்தால் தலையிடுவோம்: ஐகோர்ட்
புதிய டி.ஜி.பி., தேர்வில் முறைகேடு நடந்தால் தலையிடுவோம்: ஐகோர்ட்
ADDED : ஆக 05, 2025 05:50 AM
மதுரை: 'புதிய டி.ஜி.பி., தேர்வில் முறைகேடு புகார் எழுந்தால் நீதிமன்றம் தலையிடும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத் தாக்கல் செய்த பொதுநல மனு:
டி.ஜி.பி., சங்கர் ஜிவால், ஆக., 31ல் பணி ஓய்வு பெறுகிறார். அப்பதவியில் நியமனம் மேற்கொள்ள வேறொருவரை தேர்வு செய்வதற்கு, தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு, தமிழக அரசு, மூன்று மாதங்களுக்கு முன் பரிந்துரைத்திருக்க வேண்டும்.
தற்போது வரை பட்டியலை அனுப்பவில்லை. சங்கர் ஜிவால் பணி நீட்டிப்பு செய்யப்படலாம் அல்லது ஒருவரை பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்க வாய்ப்புள்ளது. அது உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது.
தமிழக சட்டசபை தேர்தல், 2026ல் நடைபெற உள்ளது. தங்களுக்கு சாதகமானவர்களை டி.ஜி.பி., பொறுப்பில் வைத்துக்கொள்ள மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது.
ஆணவக்கொலை, குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட டி.ஜி.பி., நியமனத்தை முறையாக மேற்கொள்வது அவசியம்.
சங்கர் ஜிவாலுக்கு பணி நீட்டிப்பு செய்ய அல்லது பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்க தடை விதிக்க வேண்டும். டி.ஜி.பி., பதவிக்கு தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ்வரன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்றம், 'பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்கக்கூடாது. காவல்துறை அதிகாரிகளில் பணி மூப்பு உள்ளவர்களுக்கே டி.ஜி.பி., நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்தி ய அரசு பணியாளர் தேர்வாணையம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது; உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இதை, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பின்பற்றுவதில்லை.
டி.ஜி.பி., நியமனத்தில் எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். முரண்பாடு, முறைகேடு புகார் இருப்பின் நீதிமன்றம் தலையிடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமை செயலர், உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆக., 11க்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், புதிய டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., தாமோதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, 'தற்போதைய டி.ஜி.பி., ஆக., 31ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
'புதிய டி.ஜி.பி., நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.