/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வந்தாச்சு சின்னம்மை.. காற்றில் உள்ள வைரஸ் மூலம் பரவுகிறது; குழந்தைகளே இலக்கு என்பதால் கவனம்
/
வந்தாச்சு சின்னம்மை.. காற்றில் உள்ள வைரஸ் மூலம் பரவுகிறது; குழந்தைகளே இலக்கு என்பதால் கவனம்
வந்தாச்சு சின்னம்மை.. காற்றில் உள்ள வைரஸ் மூலம் பரவுகிறது; குழந்தைகளே இலக்கு என்பதால் கவனம்
வந்தாச்சு சின்னம்மை.. காற்றில் உள்ள வைரஸ் மூலம் பரவுகிறது; குழந்தைகளே இலக்கு என்பதால் கவனம்
ADDED : பிப் 07, 2024 07:12 AM
மதுரை : மதுரையில் டெங்கு காய்ச்சல், கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ள நிலையில் அடுத்ததாக சின்னம்மை பரவி வருகிறது.
தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொற்றுநோய் பிரிவில் தற்போது ஐந்து பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 'வேரிசெல்லா' என்ற வைரஸ் மண்ணில் உறைந்த நிலையில் காணப்படும். வெப்பநிலை அதிகரிக்கும் போது இது காற்றில் துாசி மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வந்தால் அவர்களுடன் பேசும் போதோ, சிரிக்கும் போதோ, மூச்சுக்காற்றின் மூலமோ மற்றவர்களுக்கு மிக எளிதாக பரவி விடும்.
குழந்தைகள் தான் அதிக இலக்காகின்றனர் என்கின்றனர் தோப்பூர் நிலைய மருத்துவர் டாக்டர் காந்திமதிநாதன், தொற்று நோய் பிரிவு மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன். அவர்கள் கூறியதாவது: சின்னம்மை ஒரு முறை வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாகும். மீண்டும் வர வாய்ப்பு இல்லை. எய்ட்ஸ், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்ளும் நோயாளிகளுக்கு திரும்ப திரும்ப வரலாம்.
டிசம்பரில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சகட்டமாக பரவும். கடந்தாண்டு 20 நோயாளிகள் வரை இதே நாளில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது 5 பேரே சிகிச்சையில் உள்ளனர். வீட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்துவது நோய் பரவலை தடுக்கும் முக்கிய வழி.
இங்குள்ள வார்டில் 50 படுக்கைகளுடன் கூடிய வசதி உள்ளது. 'ஏசைக்ளோவிர்' மருந்து மற்றும் மாத்திரைகள் போதுமான அளவில் தயார் நிலையில் உள்ளது.வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைந்த நிலையில் இந்த வைரசின் தாக்கம் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளநீர், மோர் உட்பட அதிக திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும். சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் இங்கு உடனடியாக சிகிச்சைக்கு வரலாம். சைவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதோடு அதிக காய்கறி கீரை, நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால் இரு வார ஓய்வுக்கு பின் குணமடையலாம்.
பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

