/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம்: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்
/
இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம்: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்
இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம்: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்
இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம்: கவர்னர் ரவி கவர்னர் ரவி விளக்கம்
ADDED : செப் 29, 2024 07:23 AM
சோழவந்தான் : இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம் என மதுரை மாவட்டம் திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் கவர்னர் ரவி விளக்கினார்.
பாரதிய சிக் ஷன் மண்டல் (பி.எஸ்.எம்.,) தென் தமிழ்நாடு சார்பில் 'இந்திய அறிவு அமைப்பு' குறித்து ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
நிறைவு விழாவில் பி.எஸ்.எம்., தலைவர் தீனதயாளன் வரவேற்றார்.
கவர்னர் ரவி பேசியதாவது: குருகுலக் கல்வியை உயர்கல்வியிலும் செயல்படுத்திவரும் இக்கல்லுாரியில் விருந்தினராக பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கே தொழில்நுட்ப அமர்வில் பங்கேற்று அதன்மூலம் சிலவற்றை கற்றுக் கொள்ள விரும்பினேன். பாரதிய அறிவு அமைப்பு பற்றி தெரிந்தவர்கள், புரிந்து கொண்டவர்கள், பயிற்சி செய்பவர்களால் மட்டுமே அதை சமூகத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்.
இந்திய அறிவு அமைப்பு என்று கூறுவதை விட 'பாரதிய அறிவு அமைப்பு' என்று கூறலாம். இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. 'பாரதிய' என்று கூறும் போது தான் நம் பாரதம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். விஷயங்களை ஒரு குறிப்பிட்ட வழியில் பார்க்கும் 'திருஷ்டி' நமக்கு கிடைக்கும். அந்த திருஷ்டியின் பரிணாமமே பாரதம்.
நிறைய மக்கள் இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் என்ன வித்தியாசம் என கேட்கின்றனர்.இந்தியாவைப் புரிந்து கொள்வதன் மூலம் பாரதத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தியா ஒரு அரசியல் தன்மையுள்ள நாடு. வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் அதற்குரிய மக்களையும் நிர்வகிக்கும் இறையாண்மை உள்ள அரசை கொண்டது. இவையே ஒரு நாட்டிற்கான நவீன பண்புகளாகும். பாரதம் இதற்கு பொருந்தாது. பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நிலப்பரப்பு. எந்த ஒரு கால கட்டத்திலும் பாரத நிலத்தை ஒருவரே ஆண்டதாக சரித்திரம் இல்லை.
பாரத மக்கள் பல்வேறு மொழிகள், வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்கள், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுபவர்கள்; எனினும் ஒரே நிலப்பரப்பை சேர்ந்தவர்கள். காஷ்மீரில் இருப்பவர் ராமேஸ்வரம், காஞ்சிபுரத்திலுள்ள புனித ஸ்தலங்களில் நீராடலாம். 100க்கும் மேற்பட்ட புனித தீர்த்தங்கள் பாரதத்தில் உள்ளன. அவை வெவ்வேறு ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவை. எனினும் அவை பாரதம் எனும் ஒரே குடையின் கீழ் வருபவை.
மக்கள் பாரதத்தின் எந்தப் பகுதிக்கும் சென்று புனிதநீராடவும், வழிபடவும், பூஜை செய்யவும் உரிமை உண்டு. எனவே பாரதத்தை ஒருவர் புரிந்து கொள்ளாமல் பாரதிய அறிவு அமைப்பை புரிந்து கொள்வது கடினம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இவ்வுலகிலுள்ள படைப்புகள் அனைத்தும் ஒரே தெய்வீகத்தின் பல்வேறு வெளிப்பாடுகள். ஒவ்வொருவரும் கோட்பாட்டு ரீதியாக அல்லாமல் இயல்பாகவே எல்லோருடனும் தொடர்புடையவர்கள்.
இவ்வாறு விளக்கினார்.
கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் வன்னியராஜன், திருச்சி ராமகிருஷ்ண தபோவனம் துணைத் தலைவர் சுவாமி நியமானந்தா, கல்லுாரி செயலாளர் சுவாமி வேதானந்தா, ஹரியானா மாநில உயர்கல்வித்துறை அலுவலர் பேராசிரியர் ராஜேந்திரகுமார் அனயாத், மாணவர்கள் பங்கேற்றனர்.