/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை என்ன
/
வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை என்ன
ADDED : பிப் 07, 2025 04:02 AM
மதுரை : வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மறுசீரமைப்பிற்கான மாவட்ட அளவிலான குழு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு:
வைகை ஆற்று நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பயனடைகின்றன. இவற்றில் வைகை பயணிக்கும் 260 கி.மீ.,துாரத்தில் 177 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளின் கழிவுகள் கலக்கின்றன. கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்காமல் கழிவு நீரை வெளியேற்றுவதால் வைகை ஆறு மாசடைகிறது. இது நீடித்தால் வைகை பயனற்றுப் போகும். மாசுபடுவதை தடுக்க வேண்டும். மாசுபடுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
மதுரை நாகராஜன்,'வைகையை பாதுகாக்க ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்தேன். இரு நீதிபதிகள் அமர்வு,'வைகையில் கழிவுகளை குவிப்பது, கலப்பதை தடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றாததால் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
மதுரை டி.ஆர்.ஓ.,சக்திவேல் ஆஜரானார்.
நீதிபதிகள்: வைகை ஆறு பாதுகாப்பு, மறுசீரமைப்பிற்கான மாவட்ட அளவிலான குழுவை 2020 ல் மதுரை கலெக்டர் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளார். கலெக்டரை தலைவராகக் கொண்ட அக்குழுவில் உறுப்பினர் செயலராக டி.ஆர்.ஓ., உறுப்பினர்களாக மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்றுள்ளனர். உறுப்பினர்கள் வாரந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். கழிவுநீரை கலக்கவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்த வேண்டும் என அரசாணையில் உள்ளது. அதை இதுவரை பின்பற்றவில்லை. இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து டி.ஆர்.ஓ.,மார்ச் 6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.