ADDED : பிப் 07, 2024 07:13 AM
மதுரை : மதுரை மாவட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.300 கோடி இலக்கு நிர்ணயித்தனர். தற்போது வரை ரூ.225 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் வரை விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவது குறைவாக இருந்தது. நவம்பரில் தண்ணீர் திறப்பையடுத்து விவசாயிகள் அதிக அளவில் பயிர்க்கடன் பெற்றனர். சம்பா பருவம் முடிந்த நிலையில் தற்போது வரை ரூ. 225 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இலக்கு குறித்து கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது: பிப்ரவரியில் ரூ.45 கோடிக்கு பயிர்க் கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. மார்ச்சில் இலக்கை எட்டி விடுவோம். கறவை மாட்டுக் கடன் பராமரிப்புக்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரம் வழங்குகிறோம். ரூ. 120 கோடி கடன் இலக்கில் தற்போது ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. போதுமான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
தற்போது வரை மதுரை மாவட்ட வேளாண் துறையின் கீழ் யூரியா 3000 டன், டி.ஏ.பி. 1000, பொட்டாஷ் 1100, கலப்பு உரம் 5100 டன் என தேவைக்கு அதிகமாகவே உரங்கள் இருப்பில் உள்ளது.

