/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரிதாபத்தில் சுற்றுலாத்துறை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு இடமாற்றப்படுமா
/
பரிதாபத்தில் சுற்றுலாத்துறை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு இடமாற்றப்படுமா
பரிதாபத்தில் சுற்றுலாத்துறை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு இடமாற்றப்படுமா
பரிதாபத்தில் சுற்றுலாத்துறை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு இடமாற்றப்படுமா
ADDED : ஜூலை 17, 2025 12:32 AM
மதுரை: சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் மதுரையில் மாவட்ட சுற்றுலா அலுவலகம் 'பளிச்'சென்று இல்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலையம் அருகே மாவட்ட சுற்றுலா அலுவலகம் உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல், ஜல்லிக்கட்டு, அழகர் திருவிழா, தெப்பக்குளம் தெப்பத் திருவிழாக்களின் போது வெளிநாட்டவர்கள் அதிகம்பேர் மதுரை வருகின்றனர். மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், மகாலையும் பார்வையிடுகின்றனர். வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலமோ, தனியாகவோ மதுரை வருகின்றனர். இவர்களை விழாக்களில் பங்கேற்க செய்வதற்கு சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சுற்றுலாத்துறை அலுவலகத்தில் இருந்து பஸ்கள் மூலம் ஜல்லிக்கட்டு, கிராமங்களில் நடக்கும் பொங்கல் விழாக்கள், அழகர் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான முன்பதிவு ஆன்லைன் முறையில் இருந்தாலும் நேரடியாக மாவட்ட அலுவலகம் வந்தும் செல்லலாம். குறிப்பாக விழாக்களுக்கான துவக்க இடம் மாவட்ட சுற்றுலா அலுவலகமாக உள்ளது. இங்கிருந்து தான் பஸ் மூலம் விழாக்கள் நடக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றனர்.
'பளிச்'சென இல்லை
எந்நேரமும் ரோட்டில் புழுதி பறக்கும் இடத்தில் பரிதாபமாக உள்ளது சுற்றுலா அலுவலகம். சமீபத்தில் இங்கு பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டாலும் அலுவலகத்திற்கு முன்புறமுள்ள இடம் முழுவதும் பேவர் பிளாக் சரிசெய்யப்படவில்லை. இதனால் அலுவலகத்தில் துாசி படிந்து கொண்டே இருக்கிறது. மிகச்சிறிய அலுவலகத்தில் வெளிநாட்டவர்கள் உட்காருவதற்கான வரவேற்பறையும் இல்லை. முன்புறத்தில் உள்ள சோபா அழுக்கடைந்து காணப்படுகிறது. சுற்றுலா அலுவலகம் அருகிலேயே சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் பராமரிக்கப்படும் தமிழ்நாடு ஓட்டல் மிக நேர்த்தியாக உள்ளது. அதையொட்டியே உட்புறம் வழியாக செல்லும் படி வாசலை மாற்றலாம். தற்காலிகமாக வரவேற்பறைக்கான கூடுதல் கட்டடத்தையும் கட்டலாம்.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி மூலம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நான்கு தளங்களுடன் கூடிய பிரமாண்ட வளாகம் கட்டப்பட்டு நான்காண்டுகளாகிறது. ஆரம்பத்தில் இந்த கட்டடத்தை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க திட்டமிட்ட நிலையில் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த கட்டடத்தை விரைவில் திறந்து மாவட்ட சுற்றுலா துறை அலுவலகத்தையும் இங்கேயே மாற்றலாம்.
வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் வந்து செல்லும் போது பெருமையாக இருக்கும். மேலும் இங்கே சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான 'டார்மெட்ரி' வகை படுக்கைகளும், தனியறைகளும் சில மணி நேரங்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கான அறைகளும் உள்ளன. இவற்றை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைத்தால் முறையான வருவாய்க்கும் வழி கிடைக்கும்.