ADDED : ஜன 18, 2026 07:39 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் புதிய பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியதாவது: மன்னாடிமங்கலம்- இரும்பாடி இடையே வைகையாற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து குருவித்துறை மன்னாடிமங்கலத்திற்கு பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டியை சேர்ந்தவர்கள் பலர் இதில் பயணித்து, மன்னாடிமங்கலத்தில் இறங்கி பாலம் வழியே இரும்பாடிக்கு நடந்து செல்கின்றனர்.
ஊருக்குள் தான் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. அங்கிருந்து பாலத்திற்கு நீண்ட துாரம் நடந்து வர வேண்டியுள்ளது.
எனவே அணைப்பட்டி- மதுரை ரோட்டில் பாலம் சந்திப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைத்தால் பயனுள்ளதாக அமையும். தற்போது இரும்பாடியில் பாலம், ரோடு பணிகள் நடப்பதால் பஸ்கள் ஊருக்குள் செல்வதில்லை. மாணவர்கள், கூலித் தொழிலாளிகள் சிரமம் அடைகின்றனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

