ADDED : அக் 27, 2024 07:26 PM

மயிலாடுதுறை :மயிலாடுதுறை அருகே குண்டும் குழியுமான சாலையில் சென்ற டூவீலர் சறுக்கி விழுந்த போது எதிரே வந்த பஸ் மோதியதில் போலீஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்.35. முதல் நிலைக் காவலர். பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார்.
இன்று மதியம் பரந்தாமன் உணவு அருந்த வீட்டிற்கு தனது பேஷன் ப்ரோ டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றுள்ளார். சுந்தரப்பன்சாவடி என்ற இடத்தில் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக, தற்போது பெய்து வரும் மழையில் சேரும் சகதியுமாக கிடக்கும் சாலையில் சென்றபோது டூவீலர் கருங்கல் ஜல்லியில் சறுக்கியதில் நிலைதடுமாறி பரந்தாமன் சாலையில் விழுந்துள்ளார். அப்போது எதிரே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் பரந்தாமன் மீது மோதியது.
இதில் பரந்தாமன் இடுப்பு பகுதி முற்றிலுமாக நொறுங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து பரந்தாமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் தற்போது பரந்தாமன் இறந்த இடத்தில் ஏற்கனவே 3 விபத்துக்கள் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.