/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜாக்டோ - ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
ஜாக்டோ - ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 01:56 AM
ஜாக்டோ - ஜியோ கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில், நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி, முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முருக செல்வராசன், மாவட்ட இணை செயலாளர் ராமச்சந்திரன், வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன், சரவணன், மதியழகன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.