ADDED : மார் 19, 2025 01:06 AM
கோடையில் சீரான குடிநீர்வழங்க ஆலோசனை கூட்டம்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதி மக்களுக்கு, கோடை காலத்தில் பற்றாக்குறை இன்றி, தேவையானளவு குடிநீர் வழங்குவது குறித்து, நகராட்சி அலுவலர்கள், குடிநீர் பணியாளர்களுடன், நேற்று நகராட்சி தலைவர் ஆலோசனை நடத்தினார். நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''கோடைகாலம் துவங்கி உள்ளதால், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதி முழுவதும் மக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் எடுக்கும் ராட்சத மோட்டரில் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரேற்றும் நிலையத்தில் வால்வு புதுப்பிக்க வேண்டும். குடிநீர் குறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
