/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்.புதுப்பட்டியில் தேர் திருவிழாஉருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்
/
ஆர்.புதுப்பட்டியில் தேர் திருவிழாஉருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்
ஆர்.புதுப்பட்டியில் தேர் திருவிழாஉருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்
ஆர்.புதுப்பட்டியில் தேர் திருவிழாஉருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்
ADDED : ஏப் 10, 2025 01:24 AM
ஆர்.புதுப்பட்டியில் தேர் திருவிழாஉருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் பிரசித்திப்பெற்ற துலுக்க சூடாமணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம், தேர் திருவிழா நடப்பது வழக்கம். புதுப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியதும் சுற்றுப்பகுதியில் உள்ள, 18 கிராமங்களில் கோவில் திருவிழா தொடங்கிவிடும். துலுக்க சூடாமணியம்மன் கோவில் உற்சவர் சிலை, சீராப்பள்ளியில் உள்ள செவந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து சுவாமி ஊர்வலமாக குச்சிக்காடு, வடுகம் வழியாக புதுப்பட்டி வந்து சேரும்.
வரும் வழியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அப்போது திருவிழா தொடங்கிவிடும். இதனால் புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பண்டிகையை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. இந்தாண்டு தேர் திருவிழா, இரண்டு வாரங்களுக்கு முன் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கடந்த, ஞாயிற்றுக்கிழமை சீராப்பள்ளியில் இருந்து சுவாமி புதுப்பட்டி வந்தடைந்தது. அன்றிரவு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை தேரோட்டம் தொடங்கியது. விழாக்குழு நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தேர்வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேர் நிலையை விட்டு கிளம்பும்போது சக்கரத்தில் பக்தர்கள் தேங்காய் உடைத்தனர். தேர் செல்லும்போது பின்னால் பக்தர்கள் உருளுதண்டம் போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேர் திருவிழாவில் முகாம் நீதிமன்றம்
நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். பாதுகாப்புக்காக, புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பதிவு செய்யும் வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க, இரண்டு நாட்கள் குற்றவியல் நீதிமன்றம் செயல்படும். அதன்படி, நேற்று அரசு தொடக்கப்பள்ளியில் முகாம் நீதிமன்றம் கூடியது.
நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா வழக்குகளை விசாரித்தார். இதில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட, ஆறு பேருக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். புதுப்பட்டி தேர் திருவிழாவின்போது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களுக்கு ஏற்படும் சிறு காயங்கள் மற்றும் வெயில் கடுமையால் ஏற்படும் மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதலுதவி அளிக்கவும் கோவிலை சுற்றி சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும், மூன்று நாட்களுக்கு சிறப்பு மற்றும் தற்காலிக மருத்துவ முகாம் நடக்கிறது.

