/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விதை பரிசோதனை செய்து விதைத்தால் அதிக மகசூல்
/
விதை பரிசோதனை செய்து விதைத்தால் அதிக மகசூல்
ADDED : ஆக 25, 2024 01:23 AM
விதை பரிசோதனை செய்து
விதைத்தால் அதிக மகசூல்
நாமக்கல், ஆக. 25-
'விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்' என, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் தேவிப்பிரியா, சரண்யா தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
'நல்ல விதையே நல்விளைச்சலுக்கு வித்தாகும்' என்பதற்கேற்ப, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் விதைகளின் தரம் அறிந்து விதைப்பு மேற்கொண்டால், நல்ல மகசூல் பெறலாம்.
நல்விதை என்பது, நல்ல முளைப்புத்திறன் உடையதாகவும், புறத்துாய்மை, இனத்துாய்மை, ஈரப்பதம் ஆகியவை விதைகளுக்கேற்ப குறித்த அளவில் இருத்தல் வேண்டும். பிற ரக கலப்பு இல்லாமலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமலும் இருத்தல் அவசியம்.
எனவே, விவசாயிகள் விதைக்கும் முன், விதையின் தரம் அறிந்து விதைப்பு மேற்கொள்ள வேண்டும். விதை பரிசோதனை செய்வதன் மூலம், விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்துாய்மை, பிறரக கலப்பு ஆகியவற்றை கண்டறியலாம்.
விவசாயிகள் தங்கள் விதையின் தரத்தினை அறிந்து கொள்ள, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில், விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறையின் கீழ் இயங்கி வரும், விதை பரிசோதனை நிலையத்தில், விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் கட்டணமாக செலுத்தி, விதைப்பரிசோதனை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.