ADDED : மே 02, 2024 11:29 AM
ப.வேலுார்: ப.வேலுார் காவிரி ஆற்று கரையோர பகுதிகளில் மணல் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் செய்து வந்தாலும், போலீசார் அசந்த நேரத்தில் மணல் திருட்டு நடக்கிறது. மணல் திருட்டு குறித்து புகார் அதிகளவு வந்த நிலையில், தற்போது ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி உள்பட, 10க்கும் மேற்பட்ட போலீசார் இரவு நேரத்தில் நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், ப.வேலுார், பொத்தனுார் காவிரி கரையோர பகுதிகளில் ரோந்து பணியை தீவிரமாக்கியுள்ளனர். காவிரி ஆற்றில் மணல் திருடர்கள் உள்ளே செல்லாத வகையில் குழி பறித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மணல் திருட்டு நடக்கவில்லை.
இதேபோல் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரமாக்கவும் மற்றும் மணல் திருட்டு நடக்கும் சாலைகளில் கேமரா வைத்தால் மட்டுமே காவிரி ஆற்றில் மணல் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

