ADDED : மார் 20, 2024 10:36 AM
நாமக்கல்: 'லோக்சபா தேர்தலை முன்னிட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் ஒரே கட்டமாக நடக்கிறது. அவசர கால வாகனங்களில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், ஆவணங்களை தவிர வேறு எந்த பொருட்களையும், சாதனங்களையும் வைத்திருக்க கூடாது. அவசர மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அங்கீகரிக்கப்படாத எந்த நபரும் ஆம்புலன்ஸில் ஏறுவதை அனுமதிக்க கூடாது.
அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்யவோ அல்லது ஆவணங்களை சரி பார்க்கவோ அனுமதிக்க வேண்டும். நோயாளிகளின் உடன் வருபவர்களின் உடமைகளை ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன் சரிபார்க்க வேண்டும்.
தேர்தல் சம்பந்தமான சாதனங்களையோ, பிரசாரம் சம்பந்தமான சாதனங்களையோ வைத்திருந்தால், அதை தவிர்த்து விட்டு ஆம்புலன்சில் ஏற அறிவுறுத்த வேண்டும். ஒத்துழைப்பு தரவில்லை எனில், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
