/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
18 கிலோ திமிங்கல எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
/
18 கிலோ திமிங்கல எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
ADDED : ஏப் 20, 2025 03:12 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற மூன்று பேரை, வனத்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே ஜி.வி.ஆர்., என்ற பெயரில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சம் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக, ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இரண்டு நாட்களாக வனத்துறையினர், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை, சந்தேகப்படும்படி இரண்டு கார்கள் தோட்டத்திற்குள் நுழைந்தன. வனத்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, இருவர் தப்பி ஓடினர். சோதனையில், திமிங்கல எச்சம் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன், 55, சேலத்தை சேர்ந்த ஜலீல், 58, ரவி, 55, ஆகியோரை போலீசார் பிடித்தனர். தப்பி ஓடியவர்கள், கொல்லிமலையைச் சேர்ந்த சந்திரன், வாழப்பாடியைச் சேர்ந்த ராம்குமார் என, தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 18 கிலோ திமிங்கல எச்சம், ஐந்து மொபைல் போன், இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.
திமிங்கல எச்சத்தை, சந்திரன், ராம்குமார் இருவரும் எடுத்து வந்துள்ளனர். இதை விலைபேசி விற்கும் பணிக்கு, மூன்று பேர் வந்துள்ளனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார், தப்பியோடியவர்களை தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.

